அம்பாறை மாவட்ட தமிழருக்கு நிவாரணம் சீராக வழங்கப்பட வேண்டும்! – கோடீஸ்வரன் எம்.பி. வலியுறுத்து.
“இயற்கை அனர்த்தங்கள் ஜாதி, மத, பேதம் பார்த்து நிகழ்வதில்லை. அந்த அடிப்படையில் அண்மையிலே ஏற்பட்ட ரித்வா பேரிடரால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களுக்கு அரச நிவாரணம் சீராகச் சென்றடையவில்லை என்று பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் அதில் கவனம் எடுக்க வேண்டும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அம்பாறை மாவட்டத்தில் டித்வா பேரிடருக்கு அடுத்த காலப் பகுதியில் மின்சாரம் இன்மையால் உரிய அதிகாரிகள் முறையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் விவரங்களை உரிய வேளையில் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அம்பாறை மாவட்ட அரச அதிபர் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
