“எடுக்காதே எடுக்காதே குப்பைக்கான வரி எடுக்காதே!” – மலையகத்தில் ஆர்ப்பாட்டம்.

நுவரெலியா, பொகவந்தலாவை நகரில் காணப்படும் குப்பைகளைச் சேகரிக்க நோர்வூட் பிரதேச சபை அதிக வரி அறவிடுதாகத் தெரிவித்து பொகவந்தலாவை வர்த்தகர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை வர்த்தக நிலையங்களில் உள்ள அனைத்து வர்த்த நிலையங்களையும் மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

இதில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை பஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பிரதான நகரம் ஊடாக செல்வகந்த சந்தி வரை சென்று மீண்டும் பேரணியாக பொகவந்தலாவை தண்டாயுதபாணி ஆலயம் முன்பாக வந்தடைந்தது.

0-0x0-1-0-{}-0-0#

பொகவந்தலாவை நகரப் பகுதியில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளை நோர்வூட் பிரதேச சபை சேகரிப்பதற்கு அதிகூடிய வரியைக் கோருவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

“நகரப் பகுதியில் உள்ள சேகரிக்கப்படும் குப்பைகளுக்கும் நாம் பெறும் தண்ணீருக்கும் நோர்வூட் பிரதேச சபைக்கு நாங்கள் வருடா வருடம் வரிப்பணம் செலுத்தி வருகின்றோம். தற்போது பொகவந்தலாவை நகரில் குவியும் குப்பைகளைச் சேகரிக்க நாளாந்தம் 200 ரூபாவை மேலும் செலுத்துமாறு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கோருகின்றார். ஆனால், நாம் ஒருபோதும் குப்பைக்கான வரிப்பணத்தைச் செலுத்தப்போவதில்லை.” – என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

“எமது பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

“எடுக்காதே எடுக்காதே குப்பைக்கான வரி எடுக்காதே”, “கட்டமாட்டோம் கட்டமாட்டோம் குப்பைக்கான வரியைக் கட்டமாட்டோம்”, “நாங்கள் செலுத்தும் வரிக்கு என்ன பயன்”, “மேலும் ஒரு வரிச் சுமையா குப்பைக்கு” போன்ற பாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.