ஹரியானாவில் அதிசயம்: 10 மகள்களுக்குப் பிறகு பிறந்த தம்பி – மகிழ்ச்சியில் திளைக்கும் கூலித் தொழிலாளி குடும்பம்

சண்டிகர்: ஹரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சஞ்சய் குமார். இவருக்கு கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது.

ஆண் வாரிசு மீது ஆர்வம் கொண்ட சஞ்சய்க்கு முதலில் பிறந்தது பெண் குழந்தைதான். இருப்பினும், எப்படியாவது ஆண் வாரிசு வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் அடுத்தடுத்து 10 பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். அவரது மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், 37 வயதான சஞ்சயின் மனைவி மீண்டும் கருத்தரித்த நிலையில் இந்த முறை அவர் விரும்பியது போலவே 11-வதாக ஆண் வாரிசு அந்த குடும்பத்துக்கு கிடைத்துள்ளது. இதனால், சஞ்சயின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகப்பேறு மருத்துவர் நர்வீர் ஷியோரன் கூறுகையில், “இது அதிக ஆபத்துள்ள பிரசவம் என்றாலும், தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்” என்றார்.

கூலித் தொழிளாளி சஞ்சய்குமார் கூறுகையில், “எங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். என் மூத்த மகள்களில் சிலரும் சகோதரன் வேண்டும் என்று விரும்பினார்கள். இப்போது 11-வதாக மகன் பிறந்துள்ளான். எனது சொற்ப வருமானத்தில் மகள்களுக்கு நல்ல கல்வி கொடுக்க முயற்சிக்கிறேன். நடந்தது எல்லாம் கடவுளின் சித்தம். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.