அநுர தரப்புக்கு சி.வி.கே. பகிரங்க எச்சரிக்கை.

“தேசிய மக்கள் சக்தியினர், அரச நிதியில் வடக்குக்கு வந்து ‘ஷோ’ காட்டுவதை நிறுத்த வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பிலோ, கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலோ தேசிய மக்கள் சக்தியினர் தலையிட வேண்டிய அவசியமும் தேவையில்லை. அதேபோன்று இந்த விவகாரத்தில் அநுர தரப்பினர் குத்தி முறியவும் தேவையில்லை. மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.

அந்தக் கூட்டங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கோ, மக்கள் பிரதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புகளும் விடப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.

வெறுமனே அரச நிதியில் என்.பி.பி. அல்லது ஜே.வி.பி. கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து இருக்கின்றனர்.

எனவே, அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் ‘ஷோ’ காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் என்.பி.பியினர் வடக்குக்கு வந்து ‘ஷோ’ அதாவது படம் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். இந்த அரசு தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.