யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின விழா.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலாசாரப் பெருவிழா, நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த மாலை நேர நிகழ்வில், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர், இந்தியத் துணைத் தூதுவருக்குத் தனது குடியரசு தின வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், கலாசார நிகழ்வுகளையும் கண்டுகளித்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.












