எந்த நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கு இந்தியா உதவி – குடியரசு தின நிகழ்வில் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு.

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் இலங்கைக்கு விசேட இடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இரு நாடுகளுக்கிடையிலான உறவு நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் மக்களிடையிலான உறவுகள் மூலமாக மேலும் வலுப்பெற்றுள்ளது.

மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு, சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம், திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ரயில் பாதை புனரமைப்பு, துறைமுக அபிவிருத்தி, கப்பல் மற்றும் விமான சேவைகள் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பௌதீக இணைப்புகள் வலுப்பெற்றுள்ளன.

இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம், யு.பி.ஐ. கொடுப்பனவு முறைமை போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில், இந்திய முதலீடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன.

இலங்கைக்கான இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளன.

டித்வா புயலின் போது இந்தியா முதற்கட்டமாக உதவி வழங்கியது. மனிதாபிமான உதவிகள் துரிதமாகவும் நிபந்தனையற்ற வகையிலும் வழங்கப்பட்டன.

இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து செயற்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.