ஆன்மிக சுற்றுலா: வேன் மீது லாரி மோதி 4 பேர் பலி

மும்பை,

தானே மாவட்டம், டோம்பிவிலி(மேற்கு) உமேஷ்நகர் பகுதியை சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர், திவாவை சேர்ந்த சில உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலாவாக சோலாப்பூர், கோலாப்பூரில் உள்ள கோவில்களுக்கு நேற்று முன்தினம் வேனில் புறப்பட்டு சென்றனர்.

தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள துல்ஜா பவானி கோவில் மற்றும் பிற கோவில்களில் சாமி தரிசனம் செய்த பிறகு, அவர்கள் பண்டரிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு 7.30 மணியளவில் அந்தப்பகுதியில் அதிவேகமாக வந்த ஒரு லாரி, பக்தர்கள் சென்ற வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த சோனம் அஹிரே, சவிதா குப்தா மற்றும் யோகினி கேகனே ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து வந்த சோலாப்பூர் போலீசார் படுகாயமடைந்த 10 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.