குரங்கு கிணற்றில் வீசிய 20 நாள் குழந்தை: உயிரைக் காத்த ‘டயாப்பரும்’ செவிலியரின் ‘CPR’ சிகிச்சையும்.

20 நாள் குழந்தையை குரங்கு கிணற்றில் வீசியதில், குழந்தை அணிந்திருந்த டயாப்பர் அதன் உயிரை காப்பாற்றியுள்ளது. +

குழந்தையை கிணற்றில் வீசிய குரங்கு
சத்தீஸ்கரின் ஜஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள செவ்னி கிராமத்தில் அரவிந்த் ரத்தோர் மற்றும் சுனிதா ரத்தோர் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை, சுனிதா ரத்தோர் தனது 20 நாள் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்துள்ளார்.

அப்போது வீட்டின் கூரைக்கு குரங்கு கூட்டம் வந்த நிலையில், ஒரு குரங்கு எதிர்பாராத விதமாக கீழே இறங்கி, சுனிதாவின் கையில் இருந்த குழந்தையை பறித்து மீண்டும் வீட்டின் கூரை மீது ஏறியுள்ளது.

உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் பட்டாசு வெடித்து குரங்கை பயமுறுத்த முயன்றனர். குரங்கு பயத்தில், குழந்தையை அருகே இருந்த கிணற்றில் வீசி சென்றுள்ளது.

உடனடியாக ஒரு வாளியை கிணற்றுக்குள் இறக்கி குழந்தையை ஒரு சில நிமிடங்களில் மீட்டுள்ளனர்.

குழந்தையின் உடலில் மாட்டப்பட்டிருந்த டயப்பர் நீரை உறிஞ்சாமல், பாதுகாப்பு கவசம் போல் செயல்பட்டு குழந்தை மூழ்காமல், நீரின் மேல் மிதக்க உதவியுள்ளது.

இருப்பினும் குழந்தை சுய நினைவை இழந்திருந்த நிலையில், தொண்டு நிறுவன நிகழ்வில் கலந்து கொள்ள அந்த கிராமத்திற்கு வந்திருந்த செவிலியர் ராஜேஸ்வரி ரத்தோர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று குழந்தைக்கு CPR அளித்துள்ளார்.

குழந்தை சுய நினைவு பெற்று அழ தொடங்கியதும், முதலில் குழந்தை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, அதன் பின்னர் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது.

குழந்தைக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள், குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர்.

“அந்த நேரத்தில் நர்ஸ் அங்கு இல்லையென்றால், என் குழந்தை அணிந்திருந்த டயப்பர் அங்கு இல்லையென்றால், குழந்தையைக் காப்பாற்ற முடிந்திருக்காது” என குழந்தையின் தந்தை அரவிந்த் ரத்தோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.