அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூடு: கைதான இருவருக்கும் பிணை! சிறுவனின் சாவு குறித்து உருக்கமான வாக்குமூலம் வட்டுக்கோட்டையில் இன்று இறுதிக்கிரியைகள்.
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலா 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், தலா இரண்டு ஆள் பிணைகளிலும் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனத்தில் பயணித்த மற்றுமொரு நபரும் சிறுவனின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டு, முன்னதாக எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று புதன்கிழமை, சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைதானவர்கள் நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் சம்பவத்தை விவரித்துள்ளனர்.
ஆரம்பத்தில் சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை ஓட்டியுள்ளார். எனினும், தீவுப் பகுதியில் வைத்து சிறுவன் விருப்பம் தெரிவித்ததால் அவரிடம் வாகனத்தை ஒப்படைத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் மறித்தபோது வாகனத்தை நிறுத்தாது சிறுவன் செலுத்தியுள்ளார். மண்டைதீவு காவலரணில் பொலிஸார் மறிக்கத் தயாராக இருந்ததைக் கண்டு வாகனத்தை மீண்டும் அல்லைப்பிட்டி நோக்கித் திருப்பியபோது, பின்னால் துரத்தி வந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
வாகனத்தில் இருந்ததாகக் கூறப்படும் சாணகம், கயிறு, வாள் மற்றும் வாகனத்தில் விழுந்துள்ள ஏனைய துப்பாக்கிச் சூடுகள் குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இவர்கள் சட்டவிரோத மாடு இறைச்சிக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனப் பல்வேறு செய்திகள் பரவி வந்தன. இருப்பினும், உயிரிழந்த சிறுவன் அல்லது கைதான இருவர் மீதும் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கள் அல்லது குற்றப் பின்னணிகள் இருந்ததாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் எவ்விதத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளன.
