தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.

கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.