பிரிவினைவாதக் கோரிக்கைகளைத் தடுக்க மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துக! – கலாநிதி தயான் ஜயதிலக வலியுறுத்து.

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட ‘கரிநாள்’ போராட்டங்கள், நாட்டில் மீண்டும் பிரிவினைவாதக் கோரிக்கைகள் தலைதூக்குவதற்கான அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சி, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இப்போராட்டங்களில் ‘வெளியக சுயநிர்ணய உரிமை’ கோரும் பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தமை ஒரு தீவிரமான அரசியல் சமிக்ஞை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் காணப்படும் இத்தகைய தீவிரமான அரசியல் நிலைப்பாடு, நாடு மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போக்கினை நோக்கி நகர்வதைக் காண்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதே சிறந்த தீர்வாகும் என்றும் அவர் முன்மொழிந்துள்ளார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் பிரிவினைவாதக் கோரிக்கைகளுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, முடங்கிக் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக ரீதியான அதிகாரப் பகிர்வு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதன் மூலமே இத்தகைய தீவிரமான கோரிக்கைகளைத் தணிக்க முடியும் என்றும், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரள வேண்டும் என்றும் கலாநிதி தயான் ஜயதிலக கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.