ஓய்வுபெற்ற ஜேர்மன் விமானி நீர்கொழும்பில் மர்ம மரணம்! – பிரேத பரிசோதனைக்கு நீதிவான் உத்தரவு.

நீர்கொழும்பு, ஏத்துக்கால பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையினுள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற ஜேர்மன் நாட்டு விமானியின் மரணம் தொடர்பில், பிரேத பரிசோதனை நடத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் ரகித அபேசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

ஏத்துக்கால, புனித செபஸ்தியான் வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு நேற்று நேரில் சென்ற நீதிவான், அங்கு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, சடலத்தை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து பிரேத பரிசோதனை முன்னெடுக்குமாறு நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அவர் பணிப்புரை விடுத்தார். இதன்போது சட்ட வைத்திய அதிகாரி ஐ.எம். திப்பட்வாவவும் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பெலாடி அக்மட் ஜோகிம் (வயது 70) எனப்படும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சில வருடங்களாக இலங்கையில் வசித்து வந்துள்ளார்.

முன்னதாக இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்த இவர், பின்னர் அவரிடமிருந்து சட்டரீதியாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த மரணத்துகான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீர்கொழும்பு தலைமையக பொலிஸாரின் ஊடாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.