இங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது! வதந்திகளை நம்பி முண்டியடிக்காதீர்கள்!! பாதுகாப்பான கடல் வழிகளிலேயே கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன என்றும் அரசு விளக்கம்.
இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இது தொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட்டார்.
அமைச்சரின் அறிவிப்பில் உள்ள முக்கிய விடயங்கள்:-
விநியோகம்
பாதிக்கப்படாது
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்படும் என மக்கள் கருதுவது தவறு என அமைச்சர் சுட்டிக்காட்டினார். “இலங்கைக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மோதல் வலயங்கள் ஊடாகப் பயணிக்கவில்லை. அவை வேறு பாதுகாப்பான கடல் வழிகளிலேயே வருகின்றன. எனவே, விநியோகச் சங்கிலியில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது” என்று அவர் விளக்கமளித்தார்.
தேவையான அளவு
கையிருப்பு
நாட்டில் தற்போதைய தேவைக்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தில் மக்கள் எரிபொருளைச் சேகரித்து வைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களுக்கு
வேண்டுகோள்
எரிபொருள் நிலையங்களில் மக்கள் முண்டியடிப்பதையும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் தவிர்க்குமாறு அரசு கோரியுள்ளது. வீண் வதந்திகளை நம்பிப் பதற்றமடைய வேண்டாம் எனவும், விநியோக நடவடிக்கைகள் வழமை போல் சீராக முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது உறுதியளித்தார்.
மத்திய கிழக்கு போர் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மாற்றமடைந்தாலும், இலங்கைக்குத் தடையின்றி எரிபொருளை விநியோகிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு எடுத்துள்ளது என்றும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
