அவசரகாலச் சட்டம்: மக்கள் உரிமைகளை நசுக்க அல்ல! தேசத்தைப் பாதுகாக்கவே இச்சட்டம்!! – பாதுகாப்பு அமைச்சு உறுதி.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சவாலான பொருளாதாரச் சூழலில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியபோது உரையாற்றிய அவர், அரசு இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், பொருளாதார வங்குரோத்து நிலை மற்றும் மக்களின் வாழ்வாதார வீழ்ச்சி ஆகியவற்றைக் கொண்ட ஒரு இக்கட்டான சூழலிலேயே நாம் நாட்டைப் பொறுப்பேற்றோம். ஊழல் நிறைந்த நிர்வாகத்தை மாற்றி, மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே எமது இலக்காகும்.

நாட்டின் முன்னேற்றத்துக்குச் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவது அத்தியாவசியமானது. அதற்கான சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம்.

தற்போது நிலவும் ‘டித்வா’ சூறாவளியின் பாதிப்புகள் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் என்பன நாட்டின் பொருளாதாரத்திலும் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறான நெருக்கடி நிலைகளைக் கட்டுப்படுத்தி, மக்களைப் பாதுகாப்பான பாதையில் இட்டுச் செல்லவே அவசரகாலச் சட்ட நீடிப்பு அவசியமாகின்றது.

இச்சட்டம் மக்களின் உரிமைகளை நசுக்கப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, தேசத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணவே இது நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலச் சவால்களை முறியடித்து, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு இந்தத் தீர்மானம் மிகவும் பொருத்தமானது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.