அடுக்குமாடி கட்டடத்திலிருந்து தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு! – வெள்ளவத்தையில் சோகம்.
கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி வீழ்ந்து 30 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை, பிரெட்டிக்கா வீதியில் அமைந்துள்ள 10 மாடி கட்டிடமொன்றிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
உடவலவே, ஒலிமட பகுதியைச் சேர்ந்த புவனேஷா ராசா ஸ்ரீகாந்த் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்தக் கட்டடத்தின் 7 ஆவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்தூக்கி அமைக்கும் பகுதியூடாக அவர் கீழே வீழ்ந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்த ஏனைய தொழிலாளர்கள் உடனடியாகக் களுபோவில வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
