ஹிருணிகா உள்ளிட்ட 15 பேருக்கு நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை – வீதி நாடக வழக்கில் ஓகஸ்டில் முன்னிலையாக உத்தரவு.

கடந்த 2022ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் வீதி நாடகத்தை அரங்கேற்றி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரையும் மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது, கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்துக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வழங்கினர். இந்தச் சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன எனவும், இது குறித்த மேலதிக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரின் அறிக்கையை ஆராய்ந்த நீதிவான், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்காக, வழக்கை மீண்டும் ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.