தேசிய தாதியர் பல்கலைக்கழகம்: பிரதமர் தலைமையில் விசேட மீளாய்வு!

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தற்போதைய செயற்பாடுகள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது என்பது நீண்டகால மற்றும் சிக்கலான ஒரு செயல்முறை என்பதால், அவசரமான தீர்மானங்களைத் தவிர்த்து, உயர்கல்வித் தரநிலைகளுக்கு இணங்க இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

தற்போது பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டு, நடைமுறைச் சாத்தியமான முறையில் இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக அக்குழுவினால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்த பிரதமர், குழு உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் கே. எல். வசந்த குமார, அகில இலங்கை தாதியர் சபையின் பிரதிநிதிகள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தாதியர்களின் தொழில்முறை அந்தஸ்தை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கச் செய்வதில் இந்தப் பல்கலைக்கழகத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.