கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீதி விபத்துக்கள் அதிகரிப்பு! – பொலிஸார் எச்சரிக்கை அறிவிப்பு.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“பதிவாகியுள்ள விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுமே அதிகளவில் உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டின் தரவுகளின்படி, வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 31 சதவீதமானோர் பாதசாரிகளாவர். எனினும், இந்த ஆண்டு அந்தத் தரவுகளில் சிறியளவு அதிகரிப்பு காணப்படுகின்றது.

வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் போக்குவரத்து ஒழுக்க விதிகளையும், சட்டங்களையும் முறையாகப் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும்.

குறிப்பாக பாதசாரிகள் எப்போதும் வீதியின் வலது புறமாக நடக்க வேண்டும். வீதியைக் கடக்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

வீதியில் நடக்கும்போதோ அல்லது வாகனங்களைச் செலுத்தும்போதோ கைத்தொலைபேசி பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் சோதனைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசேட சோதனைகள் தற்போது நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வீதி ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.