வைத்தியசாலை சேவைகள் நாளை முடங்கும் அபாயம்! – அரச மருத்துவ அதிகாரிகள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு.
அரச சேவையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அநீதியான வைத்திய இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வைத்தியர்களின் இடமாற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் தவறியுள்ளமையே இந்தப் போராட்டத்திற்குக் காரணம் என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவிக்கையில், தன்னிச்சையான மற்றும் முறையற்ற இடமாற்றங்கள் காரணமாக வைத்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இது குறித்து அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்விதமான சாதகமான தீர்வுகளும் எட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாளை நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளி பிரிவு உள்ளிட்ட ஏனைய சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், அவசர சிகிச்சை சேவைகள் மற்றும் அத்தியாவசிய சிகிச்சைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
