அம்பாறையில் காட்டு யானை தாக்குதல்: விரட்ட முற்பட்ட வயோதிபர் உயிரிழப்பு!
அம்பாறை – மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 73 வயதுடைய வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஹொம்பகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த குறித்த வயோதிபர், தனது வீட்டுக்கு அருகில் வந்த காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதன்போது ஆவேசமடைந்த யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மங்களகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
