கால்வாய்க்குள் விழுந்த நிலையில் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு! – கொலையா? விபத்தா? என்று பொலிஸார் தீவிர விசாரணை.
பாதுக்கை, அங்கம்பிட்டிய பகுதியில் வீதியோரக் கால்வாய் ஒன்றினுள் விழுந்த நிலையில் மீட்கப்பட்ட முதியவர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீதியோரக் கால்வாயில் இவர் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பத்தில் இது ஒரு வாகன விபத்தாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. எனினும், பாதுக்கை பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், இது விபத்தால் ஏற்பட்ட மரணம் என்பதற்கான எந்தவொரு தடயங்களும் அல்லது சான்றுகளும் கண்டறியப்படவில்லை. இதனால் மேற்படி நபரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் தற்போது அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
