தையிட்டி காணி உரிமையாளர்கள் கடிதத் தலைப்பு என்ற ஒரு சிறிய விடயத்துக்காகப் பிடிவாதம் பிடிக்கின்றமை கவலையளிக்கின்றது! – இப்படி யாழ். மாவட்ட அரச அதிபர் ஆதங்கம்.

காணி அளவீடு தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நாம் முனைப்புடன் செயற்பட்ட போதும், கடிதத் தலைப்பு என்ற ஒரு சிறிய விடயத்துக்காகக் காணி உரிமையாளர்கள் அளவீட்டுப் பணிக்குச் சம்மதிக்காமை மிகுந்த கவலையளிக்கின்றது” என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

தையிட்டியில் நேற்று காணி அளவீட்டுப் பணிகள் இரண்டாவது முறையாகவும் தடைப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொழும்பிலிருந்து வருகை தந்த புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் என அனைவரும் தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள காணிகளை அளவீடு செய்வதற்காக காலை 8 மணி முதல் காத்திருந்தோம்.

காணிகளை விடுவிக்கும் நோக்குடனேயே அளவீடு செய்கின்றோம் என எழுத்துமூல கடிதம் வேண்டுமென உரிமையாளர்கள் கேட்டனர். அதற்கமைய, “பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் கையளிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யப்படுகின்றது” எனும் தலைப்பில், அரச அதிகாரிகள் மற்றும் வலிகாமம் வடக்கு தவிசாளர் உட்பட 7 பேரின் கையொப்பம் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ முத்திரை அடங்கிய கடிதத்தை நாம் வழங்கினோம்.

எனினும், குறித்த கடிதத்தை ஒரு குறிப்பிட்ட அரச நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் தருமாறு அவர்கள் கோரினர். ஒரு நிறுவனத்தின் கடிதத் தலைப்புக்குள் ஏனைய திணைக்கள அதிகாரிகள் கையெழுத்திட முடியாது என்ற நடைமுறைச் சிக்கலை நாம் விளக்கியும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

உரிமையாளர்கள் பொருத்தமான காரணத்தைக் கேட்டிருந்தால் பரிசீலித்திருக்கலாம். ஆனால், வேறொரு நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் கையொப்பமிட்டுத் தருமாறு கோருவது நியாயமற்றது.

இந்த விடயங்கள் அனைத்தும் அறிக்கையாகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை விவகாரங்களைக் கையாளும் விசேட குழு இது குறித்து அடுத்தகட்ட முடிவை எடுக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.