நந்தா மோட்டார்ஸ் மீது, மூத்த பொலிஸ் அதிகாரியின் மகளது கார் மோதி விபத்து

கொழும்பு 07 இல் அமைந்துள்ள தாமரை தடாகத்திற்கு அருகிலுள்ள சொகுசு கார் விற்பனை நிலையமான நந்தா மோட்டார்ஸ் மீது, சொகுசு வாகனமொன்று இன்று (15) பிற்பகல் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த சொகுசு வண்டியின் ஓட்டுநர் ஒரு பெண் எனவும், அவர் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியின் மகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பெண்ணின் சகோதரர் கடந்த வருடம் பொரளை பகுதியில் பலியான போக்குவரத்து ஓ.ஐ.சி.யை விபத்துக்குள்ளாகி தப்பிசென்றவர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த சொகுசு வாகனம், கார் விற்பனை நிலையத்தின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதியான சொகுசு கார் ஒன்றுக்கும், வாகன விற்பனை நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.