என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும் தற்போதைய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது உண்மைதான் என்றும், எனினும் தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து சாதுரியமாகச் செயற்பட்டதன் விளைவாகவே அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பை 292 ரூபா வரை பலப்படுத்த முடிந்தது என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தனது இல்லத்தில் நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வாகன இறக்குமதி விவகாரங்கள் குறித்து இவ்வாறான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தனது ஆட்சி நீடித்திருந்தால் டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பை 275 ரூபாவாகக் குறைத்திருக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய ஆட்சியாளர்களால் கூட அதனை ஆகக்குறைந்தது 280 ரூபாக்காவது கொண்டு வந்திருக்க முடியும் என்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரூபா வலுவடைந்திருந்தால் தற்போதைய வரி அதிகரிப்பு மக்களுக்கு அந்தளவுக்குப் பெரிய சுமையாகத் தெரிந்திருக்காது. பணவீக்கம் இல்லாததால் ரூபாவின் மதிப்பு நிலைத்திருக்கும். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்படாததால் நாட்டின் செலவீனங்கள் அதிகரித்துள்ளன. எனது திட்டம் ரூபாவை மேலும் வலுப்படுத்தி மக்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதாகவே இருந்தது.
தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல் முடிவுக்கு வந்தாலும் கூட, தற்போதைய அரசின் கீழ் நிலைமைகளைக் கையாள்வது எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.” – என்றார்.
நாட்டின் பொருளாதார அமைப்புகளை ஒரு வாகனத்தின் தனித்தனி பாகங்களுக்கு ஒப்பிட்டுப் பேசிய அவர், தாம் அவற்றை ஒன்றிணைத்து ஒற்றை வாகனமாக முன்னோக்கிச் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
“அந்த வாகனத்தின் நான்கு சக்கரங்களும் எங்கே செல்ல வேண்டும் என்பதை நாம் துல்லியமாகத் தீர்மானித்து, அதற்கு ஏற்ப வாகனத்தைச் சரியாக இயக்கி, சரியான இலக்குக்குக் கொண்டு சேர்த்தோம். நாம் எங்கே போகின்றோம் என்றே தெரியாமல், காலி வீதியில் போகின்றோமா அல்லது அதிவேக நெடுஞ்சாலையில் போகின்றோமா என்ற தெளிவு இல்லாவிட்டால் பயணத்தை எப்படித் தொடர முடியும்? தற்போதைய அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. வாகனத்தின் நான்கு சக்கரங்களும் நான்கு திசைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசிடம் முறையான தலைமைத்துவம் இருக்கின்றதா என்பது பெரிய சந்தேகமாகவே உள்ளது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையான தலைமைத்துவத்துக்கு உதாரணமாகக் கடந்த காலத் தலைவர்களின் ஆளுமைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
“முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன முழு மகாவலி திட்டத்தையும் உருவாக்கி, நீர்த்தேக்கங்களைக் கட்டி, பொருளாதார வலயங்களை உருவாக்கி, ஸ்ரீ ஜயவர்தனபுரவை நாட்டின் தலைநகரமாக்கினார். நாட்டுக்கு மின்சாரம் வழங்கியதுடன் தொலைக்காட்சியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ வெறும் இரண்டு வருடங்களில் இருநூறு ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவினார்.
முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று கூறி, அதனைச் செய்தும் காட்டினார்.
அத்தகைய தலைமைத்துவம் இல்லாவிட்டால் நாட்டை எப்படி முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்? முற்றிலும் பூச்சிய நிலைக்கு வீழ்ந்திருந்த இந்த நாட்டை இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பித் தருகின்றேன் என்று பொறுப்பேற்று, அதனை நான் செய்தும் காட்டினேன்.” – என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மத்திய கிழக்கு யுத்தம் மட்டுமல்லாது முறையான திட்டமிடல் இல்லாததும் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணியாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், அனைத்து வாகனங்களையும் ஒரே நேரத்தில் இறக்குமதி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் கூறினார்.
ஐந்து வருடங்களாக வாகன இறக்குமதி முடக்கப்பட்டிருந்த பின்னணியில், தமக்கு உதவிய ஜப்பானியர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இதனைத் தற்போதைய ஆட்சியாளர்கள் மாற்றிக் கொடுத்திருந்தால், அதற்கு இனிமேல் என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
