நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு – அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்பு.
தமிழின விடுதலைப் போராட்டத்தில் வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில், ‘தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல் குழு’வின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் சுகு சிறீதரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தியாகி பொன். சிவகுமாரனின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டு தியாகி பொன். சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.








