விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி உரங்களை வழங்குவதற்குத் திட்டம் – ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனை.
எதிர்வரும் பெரும்போக விவசாய நடவடிக்கைகளின் போது விவசாயிகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி, உரிய காலத்தில் உரங்களை வழங்குவது குறித்து அரச மற்றும் தனியார் உர நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட விசேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுபோகத்துக்கான உர விநியோக நிலைமைகள் குறித்து இங்கு விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் பெரும்போகத்துக்கான உர இறக்குமதி, இருப்புக்கள் மற்றும் விநியோகத் தயார் நிலை குறித்து அரச மற்றும் தனியார் உர நிறுவனங்களின் பிரதானிகளிடம் ஜனாதிபதியின் செயலாளர் கேட்டறிந்தார். அத்துடன், உர விநியோகச் சங்கிலியைத் தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
எதிர்வரும் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் நாடளாவிய ரீதியில் பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. இதைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு ஆரம்பத்திலேயே உரிய முறையில் உரங்களை விநியோகிப்பதற்கும், உர இறக்குமதிச் செயல்முறைகளைத் துல்லியமான கால அட்டவணையின்படி மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், உர இறக்குமதியின் போது உலக சந்தையில் உர விலைகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் அதனால் உள்நாட்டுச் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து எப்போதும் அவதானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இவ்விடயங்கள் அனைத்தையும் உள்ளடக்கி, பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை எவ்விதத் தாமதமுமின்றி இறக்குமதி செய்வதற்கான முறையான தேசியத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் அதன் அடுத்த கட்ட முன்னேற்றங்களை விரிவாக ஆராய்வதற்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் ஜானகி அமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் அரச உர நிறுவனத்தின் தலைவர் பி. சி. டபிள்யூ. சேதுகே, சி.ஐ.சி. விவசாய உற்பத்தி தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சுஜீவ விஜயவீர, நியூ லங்கா கொமர்ஷல் உர நிறுவனத்தின் பணிப்பாளர் ஈ.கே. சிசிர குமார, ஹேலீஸ் உர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமுத்ர ராஜபக்ஷ, எலைட் உர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் அபேசிங்க மற்றும் இலங்கையின் முன்னணி தனியார் உர நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
