வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்களுக்கு 9 ஏ – தேசிய மட்ட தரவரிசையிலும் முன்னேற்றம்.
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் ஜி.சீ.ஈ. உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.
உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ள இம்முறை பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன், அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணம் 69.87 சதவீதத் தேர்ச்சியுடன் தேசிய மட்டத்தில் 9ஆம் இடத்தைப் பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை மாணவர்களின் உயர்தரத்துக்கான தேர்ச்சி வீதத்திலும், தேசிய மட்ட தர வரிசையிலும் வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இந்தப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 627 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
