திருப்பூரில் பரபரப்பு: யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த தாய் பரிதாப உயிரிழப்பு!
திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி சசிகலா. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக கருவுற்ற சசிகலாவிற்கு வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்தனர்.
கடந்த ஜூன் 24 ஆம் தேதி பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், ரத்தப் போக்கு நிற்காமல் உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா, பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சசிகலா உயிரிழந்தார்.
ஏற்கனவே இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது ஊத்துக்குளி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
