மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! – பொதுமக்களுக்கு டெங்கு ஒழிப்புப் பிரிவு அவசர எச்சரிக்கை.

இலங்கையின் மேல் மாகாணத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய இடங்கள் அதிகளவில் காணப்படுகின்றன என்று டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று விசேட கருத்துத் தெரிவித்த டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மேல் மாகாணத்தில் கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, டெங்குவை முழுமையாக ஒழிப்பதற்காக நாம் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து, எமது சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தற்போது நிலவி வரும் மழைக் காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோய் பரவும் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும்.

எனவே, பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு, தங்களது வீடுகள், பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் பணியிடங்களைச் சூழவுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.