நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே உயிரிழப்புக்குக் காரணம்! – மரிக்கார் குற்றச்சாட்டு.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

“முதல் நாள் அசம்பாவிதம் இடம்பெற்றபோதே, அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், இரண்டாம் நாள் ஏற்பட்ட பாரதூரமான வன்முறைச் சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே இத்தனை உயிர்கள் பலியாகக் காரணமானது. இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை போன்றது” என்றும் மரிக்கார் குறிப்பிட்டார்.

நீதி அமைச்சரின் செயல்பாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பாராட்டியமை குறித்து வினவியபோது, “அவர் அரசின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கோடே அவ்வாறு பேசுகின்றார். தனக்கு வழங்கப்பட்ட அரைவாசி பொது மன்னிப்பை முழுமையாக மாற்றிக்கொள்ளும் சுயநல நோக்கிலேயே அவர் அரசுக்குச் சார்பாகச் செயற்படுகின்றார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று மரிக்கார் விமர்சித்தார்.

சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் கருத்தைச் சுட்டிக்காட்டிய மரிக்கார், “மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறியிருக்கின்றமை, அதிகாரிகளின் மெத்தனத்தைக் காட்டுகின்றது. 2 ஆயிரத்து 400 கைதிகளை ஒரே இடத்தில் வைத்திருக்கின்றமை பெரும் தவறு. வன்முறையில் ஈடுபட்ட 100 அல்லது 200 கைதிகளை அன்றைய தினமே வேறொரு சிறைக்கு மாற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.