போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை தீவிரம் இலங்கையில் கடந்த 8 மாதங்களில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கைது!

https://www.vishmithacloud.com/s-Mbh3r6N3

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒன்றிணைந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு’ நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள திட்டத்தின் பிரதான காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக தர்மசேன இதனைத் தெரிவித்தார்.

முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த விசேட நடவடிக்கைகள் மிகவும் திறம்பட முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கைது நடவடிக்கைகளின் போது எவ்விதமான நிரபராதிகளும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுகின்றது என்றும், இது குறித்த தெளிவான அறிவுறுத்தல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதே ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் தபால் நிலையங்கள் ஊடாக நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 13 போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைச் சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

“சிறிய அளவிலான போதைப்பொருள்கள் தபால் மூலம் கொண்டு வரப்பட்டாலும், அவை சமூகத்தில் பாரிய சீரழிவை ஏற்படுத்தக்கூடும். எனவே, இவ்வாறான கடத்தல்களை முறியடிக்கச் சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.