நாய் முகமூடியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த நபர்: தெருநாய் கருத்தடை ஊழலை கண்டித்து விசித்திர போராட்டம்!

தெருநாய்களுக்கு முறையான கருத்தடை செய்யக் கோரி, நாய் முகமூடி அணிந்த ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆக. 19) மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதில் ஊழல் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டிய நபர் ஒருவர் நாய் போன்ற முகமூடியை அணிந்து வந்தார்.

மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவரான தீபக் முல்லு ரத்தோர், நாய் போன்ற முகமூடி அணிந்த அந்த நபரை அதிகாரிகளுக்கு முன்பாக நிறுத்தினார். நாய் போன்ற விசித்திரமான ஒலிகளை எழுப்பி அதிகாரிகளின் கவனத்தை அந்த நபர் ஈர்த்தார். நகரில் 13,225 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதில் ஊழல் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டிய மனுவை ஆட்சியரிடம் அந்த நபர் ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.

இதுகுறித்து நாய் வேடமிட்ட அந்த நபர் தன்னை நாயாக பாவித்துக்கொண்டு பேசியதாவது:

’’இந்த செயலை நான் நீதிக்காக செய்தேன். எங்களுக்கு (நாய்களுக்கு) கருத்தடை செய்கிறோம் என்ற பெயரில், அவர்கள் (அதிகாரிகள்) ஊழல் செய்கிறார்கள். நாங்கள் அவதூறுக்கு உள்ளாகிறோம்.

ஆனால், நாங்கள் மிகவும் விசுவாசமான விலங்குகள். எங்களுக்கு கருத்தடை செய்கிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் பணத்தை பெறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு கருத்தடை செய்யாமல் போனதால் எங்களுடைய எண்ணிக்கை அதிகமாகின.

நாங்கள் கடித்து விட்டோம் என மக்கள் உணர்கிறார்கள். ஆனால், எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. முன்பெல்லாம், எங்களுக்கு ஏதேனும் சாப்பிடக் கிடைக்கும். இப்போதெல்லாம், அவை கிடைப்பதில்லை. ஆகவே, நாங்கள் நிச்சயமாக மக்களைத் துரத்தி செல்வோம்.

எனவே, மாவட்ட ஆட்சியரிடமிருந்து எங்களுக்கு நீதி வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நான் வைரலாகிவிட்டேன் என எனக்குத் தெரியும். எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.