அநுர அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள் அமைச்சர்களே காரணம் – மனோ எம்.பி. பகிரங்க எச்சரிக்கை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள் அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நண்பர் ஜனாதிபதி அநுரவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
பாதாள உலகக் செயல்களும் போதைப் பொருளும் ஒழியும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும்.
இந்த ஆட்சிக்கு வெளி நபர்களால் எந்த ஆபத்துமில்லை. உள்ளகத்திலேயே ஆபத்து இருக்கின்றது.
நாங்கள் இன்று எதிர்க்கட்சி இல்லை, தாமே அரசு, அதிகாரம் தம்மிடம்தான் உள்ளது என்பதை உணராத, ஆளத் தெரியாத முட்டாள் அமைச்சர்கள் காரணமாகச் சிங்கள மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கு சரிந்து வருகின்றது.
இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எம்மைக் குறை கூறுவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத, செய்யாத மந்திரிகள் காரணமாக அரச செல்வாக்கு குறைந்து வருகின்றது.” – என்றார்.
