தேசிய மர நடுகை திட்டத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தொடக்கிவைத்தார்.

தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தை
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ இன்று தொடக்கிவைத்தார்

இருபது இலட்சம் மரக்கன்றுகளை நடும் ”ஹுஸ்ம தென துரு“ தேசிய மர நடுகை திட்டத்தை இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தொடக்கி வைத்தார்.

“சுபீட்சத்தின் நோக்கு” என்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் கொள்கைப் பிரகடனத்தின் படி, நாட்டின் வனப்பகுதியை 30% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ப, சுற்றாடல் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் காபனீர் ஒட்சைட் வாயுவின் அளவைக் குறைத்து, ஒட்சிசனின் அளவை அதிகரிக்கும் நோக்கத்துடன், அந்தந்த பிரதேசங்களுக்கு பொருத்தமான மரங்கள் நடப்படுகின்றன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருபது இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குச் சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை – மத்திய சுற்றாடல் அதிகார சபை, சுற்றாடல் அமைச்சு, பாதுகாப்பு தலைமையகம் மற்றும் இலங்கைத் தரைப்படை ஆகியன இணைந்து செயல்படுத்துகின்றன.

இன்று முற்பகல், பத்தரமுல்லையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் முதலாவது மரக்கன்றாக வெள்ளை சந்தன மரக்கன்று ஒன்றை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ சம்பிரதாய பூர்வமாக நாட்டி வைத்தார்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராணுவ பணிக்குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் மரக்கன்றுகளை இன்று நட்டு இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்துகொண்டனர்.

நாடு முழுவதும் மரக்கன்றுகளை விநியோகிப்பதை ஆரம்பித்து வைக்கும் வகையில் – பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.