நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர்! – மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம் என்கின்றார் சுமந்திரன்.

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று (24) தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சபையின் 33 மில்லியன் ரூபா செலவில் விளையாட்டு அரங்கை அமைப்பதற்குப் பிரதேச சபை எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது. இதேபோன்று ஏனையோரும் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை, அந்த மக்களுக்குப் பாதிக்காத வகையில் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும்.

இதேபோன்று மத்திய அரசும் யாழ். நகரில் விளையாட்டு அரங்கை அமைக்கப்போவதாக அறிவித்தது. ஆனால், இயற்கையையும் பாரம்பரிய அடையாளங்களையும் அழித்து மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அந்த இடம் அமைந்ததால் அதனை நாங்கள் எதிர்த்தோம்.

அதற்காக நாங்கள் மக்களின் அபிவிருத்தியை எதிர்க்கின்றோம் என்றும், நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்றும் எங்களுக்கு எதிராகத் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தனர். உண்மையில் நாங்கள் அபிவிருத்திக்குத் தடையில்லை. மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு இடம் என்பதனாலேயே அதனை நாங்கள் எதிர்த்தோம்.

அதனால் எங்கள் மீது பழியைப் போட்டு எங்களுக்கு எதிராகப் பொய்களைப் பரப்பினர். ஆனாலும், மக்கள் உண்மையை உணர்ந்துகொண்டதால் அந்தப் பொய்ப் பிரசாரங்களை நம்பவில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.