செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்! – நுவரெலியாவுக்கும் பயணம்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன்சார்ந்த விடயங்கள் குறித்து இலங்கைத் தலைவர்களுடன் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் 9ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார். அத்துடன், இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வும் இந்தப் பேச்சுகளில் அடங்கும்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிலும் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ளும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.