பி.பி.சி. சிங்கள ஊடகவியலாளரிடம் ஆணைக்குழு துருவித்துருவி விசாரணை!

பி.பி.சி. சிங்கள ஊடகவியலாளரிடம் ஆணைக்குழு துருவித்துருவி விசாரணை! 

பி.பி.சி. சிங்கள ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பி.பி.சி. சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தே, இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஜனாதிபதி ஆணைக்குழு இன்று விசாரணைகளை நடத்தியது.

பி.பி.சி. சிங்கள சேவைக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பேட்டியை ஒளிபரப்பு செய்து, ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளது.

இதன்போது, சாட்சி வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பி.பி.சி. சிங்கள சேவை தொடர்பில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

தான் வழங்கிய பேட்டியை, திரிவுபடுத்தி, பி.பி.சி. சிங்கள சேவை ஒளிபரப்புச் செய்துள்ளதாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

ஊடக தர்மத்தை மீறி, பி.பி.சி. நிறுவனம் செயற்பட்டதாகவும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

தான் ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் என்பதை, பி.பி.சி. நிறுவனம் ஒளிபரப்புச் செய்துள்ளதாகவும் அவர் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு, பி.பி.சி. சிங்கள சேவையின் ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம் இரண்டு மணிநேர விசாரணைகளை நடத்தியுள்ளது.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடக தர்மத்தை மீறவில்லை எனக் கூறியுள்ள ஷேலி உபுல் குமார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பேட்டியை திரிவுபடுத்தி ஒளிபரப்புச் செய்யவில்லை என்பதைப்  பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் நடத்திய பேட்டியின் பின்னர், அவர் கோபப்படும் விதத்தில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றதா எனப் பொலிஸார், ஊடகவியலாளரிடம் வினவியுள்ளனர்.

அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை எனக் கூறிய ஷேலி உபுல் குமார, சந்திப்பின் பின்னர் தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படமொன்றை எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் தான் முன்னாள் ஜனாதிபதியை நாடாளுமன்றத்திலேயே கண்டதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் கூட புகைப்படமொன்றைத் தான் எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறியதுடன், குறித்த புகைப்படத்தை பொலிஸாரிடம் காண்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.