வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷுக்கு முன் பிணை!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷுக்கு முன் பிணை!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணை முன் பிணை கிடைத்துள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அவரை இன்று முன் பிணையில் விடுவித்தது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் மீதான குற்றச்சாட்டு வழக்கை பொலிஸார் முன்னெடுக்கும்போது முழுமையான ஒத்துழைப்பை வழவங்குவதுடன், நீதிமன்றில் தவறாது முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான அச்செழு அம்மன் கோயில் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டத்துக்கு முரணாக அடிக்கல் நடப்பட்டு காட்சிப் பதாகையும் அமைக்கப்பட்டிருந்தது. குறித்த காட்சிப் பதாகையை தவிசாளர் அகற்றி இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி அதிகார அலகுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த காட்சிப் பதாகை அகற்றப்பட்டமை தொடர்பில் தவிசாளர் நிரோஷ் பொது உடமைக்குச் சேதம் விளைவித்தார் எனக் குற்றஞ்சாட்டி அவரைக் கைதுசெய்வதற்கு அச்சுவேலி பொலிஸார் தீவிரமாக முயன்று வந்தனர்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரி நிரோஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் ஆலோசனையுடன் சட்டத்தரணிகளான வி.திருக்குமரன் மற்றும் வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இந்த முன் பிணை விண்ணப்பத்தை மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தனர்.

மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இன்று அச்சுவேலி பொலிஸாரையும் மன்றில் தோன்றுமாறு தெரிவித்து மனு மீதான விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த விண்ணப்பம் மீதான விசாரணை இன்று மல்லாகம் நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விண்ணப்பதாரர் தியாகராஜா நிரோஷுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைப் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

ஆனால், விண்ணப்பதாரர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், முன் பிணைக்கான காரணத்தை எடுத்துரைத்தார்.

அதனால் விண்ணப்பதை ஏற்றுக்கொண்ட நீதிவான், முன் பிணையை வழங்கி கட்டளையிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.