மைத்திரி அணியினருக்கு சஜித் அணியினர் அழைப்பு

மஹிந்த அணியால் அதிருப்தியடைந்துள்ள  மைத்திரி அணியினருக்கு
சஜித் அணியினர் அழைப்பு

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தேவையேற்படின் தமது அணியுடன் இணைந்து பயணிக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிருப்தியில் இருக்கின்றது. எனவே, அக்கட்சி உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொண்டு பயணிக்கும் எண்ணம் உள்ளதா?’ என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தி என்பது எமது கட்சி. ஐக்கிய மக்கள் முன்னணி என்பது எமது கூட்டணி. எனிவே, எமது கட்சியின் கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடிய எந்தக் கட்சியும், அமைப்புகளும், நபர்களும் இணைந்து பயணிக்கலாம்.

கதவுகள் திறந்தே உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான அதிருப்தியால் அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சிகூட வரலாம். ஆனால், எமது கட்சியின் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” – என்றார்.

அதேவேளை, ‘ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மேளனக் கூட்டத்தில் ஏன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், கூட்டம் பதுளையில் நடைபெற்றதால் அவர்களால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மற்றும்படி எவ்வித பிரச்சனையும் இல்லை” – என்று பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.