சர்வதேச விசாரணையே ரெலோவின் நிலைப்பாடு : செல்வம் எம்.பி. திட்டவட்டம் 

சர்வதேச விசாரணையே
ரெலோவின் நிலைப்பாடு

அதன் தலைவர் செல்வம் எம்.பி. திட்டவட்டம் 

“2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்துக்கும் இடமளிக்க முடியாது. இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம்.”

– இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உறுதிபடத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஏற்கனவே 2019ஆம் ஆண்டு மார்ச் மாத ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் இதன் அடிப்படையில் எமது கட்சியால் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எமது கட்சியின் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இதற்காகவே நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டதில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு, அந்த அறிக்கையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராகிய நானும், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கையொப்பமிட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்ட முக்கிய விடயங்களாக, இலங்கை அரசை விசேட சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் மூலம் விசாரணைக்குட்படுத்தல் வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் வேண்டும். இலங்கைக்கு ஒரு விசேட அறிக்கையாளர் அமர்த்தப்பட்டு இவ்விடயங்கள் சம்பந்தமான அறிக்கைகள் சமர்ப்பித்து ஆராயப்பட வேண்டும். கால அவகாசம் வழங்கலாகாது என்பன உள்ளடக்கம் பெற்றுள்ளன. இந்த நிலைப்பாட்டிலிருந்து ரெலோ பின்வாங்காது.

அண்மையில் சுமந்திரனால் விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில், அது கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூறப்படுவதை நாங்கள் நிராகரிக்கின்றோம். அந்த ஆவணம் எங்களிடம் கையளிக்கப் படவில்லை.

அதன் உள்ளடக்கம் என்ன என்பதும் எங்களுக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூறுவது ஏற்புடையதல்ல.

இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டபோது சுமந்திரன், அது சர்வதேச அமைப்புக்களால் தயாரிக்கப்பட்டது, கருத்துக்களை கூறுமாறு குறித்த தலைவர்களிடம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, இது கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பது அங்கத்துவ கட்சிகளாகிய நாங்களும் சேர்ந்து அறிவிக்கின்ற முடிவாக இருக்குமே தவிர தனிப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமைய முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

இந்த விடயத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றும் எமது புலம்பெயர் மற்றும் சர்வதேச அமைப்புகளும் எல்லோரையும் உள்ளடக்கி ஒன்றுபடுத்திய கருத்துக்களை தயாரிப்பதில் முனைப்புடன் செயற்பட வேண்டும்.

நம்முடைய இனத்தினுடைய கோரிக்கைகளை சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறச் செய்ய தாயகத்தில் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு அவசியம் என்பதைக் கருத்தில்கொள்ளவும் வேண்டுகின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.