மருதனார்மடம் கொத்தணி மிகவும் வீரியம் கூடியது! – வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை.

மருதனார்மடம் கொத்தணி மிகவும் வீரியம் கூடியது! – வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை.

“யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாகக்  காணப்படுகின்றது.”

– இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் நாட்டில் கொரோனாத் தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது.

அதிலும் தற்போது யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாகக் காணப்படுகின்றது.

இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்று நோயால் நாட்டில் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், பண்டிகைகளுக்காகப் பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும்போது இந்த நோய் எமது பிரதேசத்திலும் மேலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே, இப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதுடன் மத வழியாடுகளில் ஈடுபடும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் பேணுதல் வேண்டும்.

அனைவரும் இப்பண்டிகைக் காலத்தில் கொரோனாத் தடுப்பு பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம்; உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எனவே, நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.