தமிழ் அரசியல் கைதிகளுக்குக் கொரோனா: உறுதிப்படுத்தியது சிறைச்சாலைகள் திணைக்களம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு (தமிழ் அரசியல் கைதிகள்) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 73 பேர் சிறைச்சாலைகளில் உள்ளனர். இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 13 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் கொழும்பிலுள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்த நிலையிலேயே சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.