மகசின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 48 அரசியல் கைதிகளுக்கும் கொரோனா உறுதி.

மகசின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
48 அரசியல் கைதிகளுக்கும் கொரோனா உறுதி.

– வைத்தியசாலையில் உள்ள 14 பேரின் விபரம் வெளியீடு

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்துள்ளது. அவர்களில் நாட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள 14 பேர் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரங்களைக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“நாட்டில் கொரோனாத் தொற்று பல கொத்தணிகளாக உருவெடுத்து மிக வேகமாகப் பரவி பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சிறைச்சாலை கொரோனா கொத்தணி மூலம் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 கைதிகள் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் 810 கைதிகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள்.

ஏனைய சிறைச்சாலைகளுடன் ஒப்பிடுகையில் மகசின் சிறைச்சாலையிலேயே தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்தநிலையில், மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது. இவர்களில், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடங்கலாக, வைத்தியர் சிவரூபன், இந்து மதகுருவான இரகுபதி சர்மா உட்பட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சின்னையா சிவரூபன், சி.ஐ. இரகுபதி சர்மா, எட்வேட் சாம் சிவலிங்கம், தங்கவேல் சிவகுமார், நாகலிங்கம் மதனசேகர், தேவசகாயம் உதயகுமார், குலசிங்கம் குலேந்திரன், றுபட்ஷன் யதுஷன், சேவியர் ஜோண்ஷன் டட்லி, தாவீது நிமல்ராஜ் பிரான்சிஸ், விநாயகமூர்த்தி நெஜிலன், இரத்தினம் கிருஷ்ணராஜ், சின்னமணி தனேஸ்வரன், ஞானசேகரம் ராசமதன் ஆகியோரே சிறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்கும் முகமாக சில பொறிமுறைகளுக்கூடாக அரசு 6 ஆயிரம் கைதிகளை விடுவித்துள்ளது. ஆன போதிலும். அதில் ஒரு தமிழ் அரசியல் கைதியேனும் உள்வாங்கப்படவில்லை. இதனால், அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.