புதுக்குடியிருப்பில் எழுமாற்றுச் சோதனை வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதி

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

மக்களுக்கு எச்சரிக்கை

புதுக்குடியிருப்பில் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் இன்று  மாலை வரையில் மக்கள் மத்தியில் நடமாடியவர் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு பொதுச்சந்தையைச் சேர்ந்த 12 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனையிலேயே ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபர் தம்புள்ளை மரக்கறிச் சந்தையில் இருந்து மொத்தமாக மரக்கறி கொள்வனவு செய்து வந்து புதுக்குடியிருப்பில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்பவர் என்று சுகாதார உத்தியோகத்தர்கள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று மாலை வரையில் குறித்த வியாபாரி சாதாரணமாக மக்கள் மத்தியில் நடமாடினார் எனத் தெரியவந்துள்ளது.

எனவே, அவருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்கள் சுகாதார அதிகாரிகளை அணுகி தம்மை அடையாளப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.