உதவி இயக்குனர் குத்தி கொலை!புத்தாண்டு கொண்டாட்டத்தில் கருத்து மோதலால் வந்த வினை

சென்னை : புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்களுக்குள் வெடித்த பிரச்சனையில் உதவி இயக்குனர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா இயக்குனராக ஆக வேண்டும் என்கிற ஆசையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரா என்பவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் தங்கி ஒரு சில படங்களில் உதவியக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடத்திற்காக இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து, ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள மற்றொரு உதவி இயக்குநர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மது அருந்தி புத்தாண்டை வரவேற்ற நண்பர்களுக்கு இடையே திடீர் என, போதையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.

மணிகண்டன் பேச்சால் ஆத்திரம் அடைத்த ருத்ரா அவரை முகத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. மணிகண்டனும் முழு போதையில் இருந்ததால், கிச்சனுக்கு சென்று அங்கிருந்த கத்தியை கொண்டு வந்து ருத்ராவை சரமாரியாக அவரது வயிற்றில் குத்தியுள்ளார்.

பின்னர் இந்த பிரச்சனையின் தீவிரத்தை அறிந்த மற்ற நண்பர்கள் சிலர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ருத்ராவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கத்தி குத்து வாங்கிய ருத்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, உதவி இயக்குனர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.