கோட்டா நியமிக்கும் ஆணைக்குழுவானது நேரத்தை வீணடிக்கும் : ஐ.நாவின் முழு நடவடிக்கையையுமே பலவீனமாக்கும் – யஸ்மின் சூக்கா

“மோசமான சர்வதேசக் குற்றங்கள் ஏதாவது இலங்கையில் புரியப்பட்டனவா என்பதை ஆராய்வதற்கு இன்னுமொரு ஆணைக்குழுவை நியமிக்கப்பட்டவை மிகவும் கேலிக்கூத்தானதாகவும், ஏமாற்றுத்தனமானதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகவும் உள்ளது. இந்த ஆணைக்குழுவானது தெளிவற்ற மற்றும் நேரத்தை வீணடிக்கும் ஒன்று மாத்திரமே. அத்துடன் அதற்கு நம்பகத்தன்மை வழங்கப்பட்டால் அது ஐ.நாவின் முழு நடவடிக்கையையுமே பலவீனமாக்கும்.”

– இவ்வாறு தென்னாபிரிக்காவின் இடைநிலை நீதி அதிகாரியும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மனித உரிமை மீறல்கள் உண்மையில் நாட்டில் இடம்பெற்றதை கடந்த கால விசாரணைகள், ஆணைக்குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளனவா என்பதை ஆறு மாதகாலத்துக்குள் கண்டறிவதற்கு இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இன்னுமொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த மாதம் 30/1 தீர்மானத்தின் கீழ் மீள் இணக்கப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஈடுபாடுகளை இலங்கை நடைமுறைப்படுத்துவது பற்றிய மீள்பார்வையில் இது எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் சபையால் 2015 இல் ஆணையிடப்பட்ட ஒரு விசாரணையானது குற்றவியல் குற்றச்சாட்டுக்களை மேற்கொள்வதற்கான ஒரு போதிய தொடக்க நிலை உள்ளதை உறுதி செய்ததுடன் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவற்றைச் செய்வதில் அரசின் பங்கையும் தெளிவாக எடுத்துக்காட்டியது. இதுவரை விசாரிக்கப்படாத கடுமையான மீறல்கள் மற்றும் குற்றங்கள் புரியப்பட்டதை அரசே குறிப்பாக ஏற்றுக்கொண்டமையால் மனித உரிமைகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளது.

01) மனித உரிமைகள் மீறல்கள் பற்றி விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட முன்னைய விசாரணை ஆணைக்குழுக்கள், குழுக்கள் ஏதாவது மனித உரிமை மீறல்கள், பாரிய சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இது போன்ற வேறு ஏதாவது குற்றங்கள் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டுபிடித்தல்.

02) பாரிய மனித உரிமை மீறல்கள், பாரிய சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் ஏனைய இது போன்ற குற்றங்கள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் என்ன கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை அடையாளம் காணுதல் மற்றும் இங்கு கூறப்பட்ட தகவல்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி ஏதாவது சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் அடையாளம் காணுதல்.

03) தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் என்ன முறையில் இந்தச் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன? அத்துடன் தற்போதைய அரச கொள்கையின் அடிப்படையில் அந்தச் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?

கடந்த கால ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புக்கள் என்ன என்பதையும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டனவா என்பதையும் புதிய ஆணைக்குழுவை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார்.

OHCHR இனுடைய விசாரணையின் ((A/HRC/30.CRP.2) சிபாரிசுகளைக் கொண்ட 4 பக்கங்களை சாதாரணமாக மீள்பார்வை செய்ய வேண்டிய அதேவேளையில் கடந்தகால ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புக்களை அடையாளம் காண்பதற்கு ஒரு ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்பது கேலிக்கூத்தானதாகும்.

நடைமுறைப்படுத்தல் என்பது இதுவரை இடம்பெறவில்லை என்பது போதியளவுக்கு தெளிவாக உள்ளது. அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் தமது சொந்த மக்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உட்பட்டவற்றுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஈடுபாடு பற்றி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார்கள்.

தீர்மானம் 30/1 மற்றும் அடுத்து வந்த தீர்மானங்களும் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் பொறுப்புக்கூறல், தேசிய நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்தலை ஊக்குவிப்பதற்கு இடைகால நீதிக்கான ஒரு விரிவான முழுமையான திட்ட வரைவை உருவாக்கியது.

மீளாய்வு செய்யப்படவேண்டிய மீறல்கள் பற்றிய எந்தக் காலவரையறையும் கொடுக்கப்படாமல் இலங்கையின் இந்தப் புதிய ஆணைக்குழுவின் விதிமுறைகள் தெளிவற்றமுறையில் எழுதப்பட்டுள்ளன.

குற்றங்கள் புரியப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக முக்கிய பணியாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு மனிதராலேயே நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவானது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் பற்றிய ஒரு வாசிப்பு குழுவினை விட கொஞ்சம் பரவாயில்லை.

இந்த புதிய ஆணைக்குழுவானது ஒரு நீதிபதியால் தலைமை தாங்கப்படுகின்றது. இந்த நீதிபதி ஐக்கிய நாடுகளில் இலங்கையை தற்காத்துக் கொள்வதில் குறைந்தது 4 சந்தர்ப்பங்களில் கடந்த காலத்தில் அவர் ஆற்றிய பணி தொடர்பில் பல நலன் முரண்பாட்டுப் பிரச்சினைகள் உள்ளன.

ஒரு சந்தர்ப்பத்தில் AHMD நவாஸ் ஜெனிவாவுக்கான இலங்கைத் தூதுக்குழுவில் அங்கம் வகித்தபோது ஜெனிவாவில் ஐ.நா. நிபுணர் குழுவின் தவறான அறிக்கை முன்வைக்கப்படுவதற்கு ஒரு எதிரான நகர்வை மேற்கொள்ளவே இந்த தூதுக்குழு அங்கு சென்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகச் சொல்லப்படும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் விடயம் பற்றி தனக்கு அறிக்கை தருமாறு இந்த ஐ.நா. குழுவானது பொதுச் செயலாளர் பான் கீ – மூனால் உருவாக்கப்பட்டது.

போர் மற்றும் சமாதானத்தின்போது ஒவ்வொருவரினதும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச சட்ட ஆட்சி முழுவதும் மீதான ஒரு பாரிய தாக்குதலையே போர் நடாத்தப்பட்ட முறையானது பிரதிபலிப்பதாக அந்தக் குழு முடிவு செய்தது.

இந்தக் குழுவின் அறிக்கையானது இறுதியில் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக்கு வழிவகுத்தது. இந்த விசாரணையானது 30/1 தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியதுடன் இது தற்போது இலங்கை பற்றிய மீள்பார்வையை இப்போது அவசியமாக்கியுள்ளது.

தான் பகிரங்கமாகவே எதிராக வாதாடிய ஐ நா. அறிக்கைகளை இந்த ஆணைக்குழுவின் தலைவரால் நடுநிலைமையான முறையில் விசாரிக்க முடியாது. இதைவிட அரசைப் பாதுகாக்கும் சட்டத்தரணியாகவும் அத்துடன் வழக்கறிஞராகவும் இரட்டைப் பணியாற்றுவதாக முற்றிலும் விமர்சிக்கப்படும் அவர் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் அங்கம் வகிக்கின்றார்.

இந்தப் புதிய ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட இன்னுமொருவர் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ. இவர் அண்மைய காலம் வரை அரசியல் மயமாக்கல் பற்றிய அரசியல் மயமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக இருந்தார். சென்ற அரசின் கீழ் கொண்டவரப்பட்ட அரசியல் மயமாக்கல் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவங்கள் பற்றிய அவரது அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.

அரசியல் மயமாக்கல் பற்றிய ஆணைக்குழுவுக்கு முன்னால் கொண்டுவரப்பட்ட பல சம்பவங்களை அவர் விசாரிப்பார் என்பதால் அது இந்தப் புதிய ஆணைக்குழுவின் உறுப்பினரான பெர்னாண்டோவும் நலன் முரண்பாட்டைக் கொண்டிருப்பார்.

பெர்ணாண்டோ 2004ஆம் ஆண்டு ஜூன் வரை பொலிஸின் தலைவராக இருந்தார் என்பதால் அந்தக் காலப் பகுதியில் பொலிஸ் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கையில் அவர் பாரபட்சமற்றவராகவும் சுயாதீனமானவராகவும் செயற்படுவது கடினமானதாக இருக்கும்.

இவர் பதவியில் இருந்தபோது விசாரணைகளைத் தலைமை தாங்குவதில் அவர் தோல்வி கண்டது பற்றி கடந்த
காலங்களில் இலங்கையிலுள்ள செயற்பாட்டாளர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளார்கள்.

இந்த ஆணைக்குழுவானது தெளிவற்ற மற்றும் நேரத்தை வீணடிக்கும் ஒன்று மாத்திரமே. அத்துடன் அதற்கு நம்பகத்தன்மை வழங்கப்பட்டால் அது ஐ.நாவின் முழு நடவடிக்கையையுமே பலவீனமாக்கும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.