இன்று முற்பகல் 11 மணிக்கு தடுப்பூசியை ஜனாதிபதி கையேற்பார்

கொவிட்-19 தொடர்பான இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் Oxford – Astrazeneca, Covishield (ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ராசெனகா-கோவிஷீல்ட்) தடுப்பூசி தொகுதி, இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையேற்கப்படவுள்ளது.

நேற்றையதினம் (27) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, தடுப்பூசி செயன்முறை தொடர்பில் விளக்கமளிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, தடுப்பூசி கிடைத்ததும், நாளை மறுதினம் (29) அதனை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 500,000 டோஸ் கொவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக கிடைக்கவுள்ளதோடு, இது நபருக்கு தலா இரண்டு தடுப்பூசிகள் எனும் அடிப்படையில் 250,000 பேருக்கு இரு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது.

குறித்த தடுப்பூசித் தொகுதி இந்தியாவின் எயார் இந்திய விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சீனாவிலிருந்தும் 300,000 டோஸ் Sinopharm (சினொபார்ம்) தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக கிடைக்கவுள்ளதாக, இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசி தகுதிகள் இருதரப்பு உத்தியோகபூர்வ நடைமுறைகளை அடுத்து எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக சீன தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து 3 இலட்சம் டோஸ் தடுப்பூசி

 

Leave A Reply

Your email address will not be published.