சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் தற்போதைய நிலை

நான்கு வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, இதுவரை கைதிகளுக்கான இலக்கம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பல்லங்சேன சிறைச்சாலையிலிருந்து, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், தனி சிறைக் கூடமொன்றில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே தெரிவிக்கின்றார்.

எனினும், ஏனைய சிறை கூடங்களில் மூன்று கைதிகள் விகிதம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் சிறை கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் என 1100 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வெளியிலிருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், மாதத்திற்கு ஒரு முறை மாத்திரமே உறவினர்களுக்கு அவரை சந்திக்க முடியும் எனவும் அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும், கடந்த சில தினங்களாக ஏனைய சிறை கைதிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய சிறை கைதிகள் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறந்த வரவேற்பை வழங்கி வருவதாக தெரிய வருகின்றது.

தனி சிறை கூடத்திலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தலையணை, பாய் மற்றும் போர்வை ஆகியன கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெத்தையை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை முன்வைக்க ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு இயலுமை காணப்படுகின்ற போதிலும், அவர் இதுவரை மெத்தை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை விடுக்கவில்லை என அறிய முடிகின்றது.

உடற்பயிற்சிகளை செய்வதற்கும், நாளாந்த பத்திரிகைகளை வாசிப்பதற்கும் ரஞ்சன் ராமநாயக்க நேரத்தை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.