விசாரணை அறிக்கையை மூடிமறைக்கமாட்டாது அரசு அமைச்சர் ஜோன்ஸ்டன் திட்டவட்டம்

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகளை ஒளிக்கமாட்டோம். கூடிய விரைவில் சபையில் முன்வைக்கப்படும்.”

– இவ்வாறு ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த இரு அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“விசாரணை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். விவாதத்துக்கு நாள் வழங்கப்படும் என சபை முதல்வர் குறிப்பிட்டார். அதுவே அரசின் நிலைப்பாடு. ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்படாமல் மறைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நாம் அவ்வாறு செய்யமாட்டோம். ஒளிக்கவும் மாட்டோம். அறிக்கைகள் கூடிய விரைவில் முன்வைக்கப்படும். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் இதனையே விரும்புகின்றனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.