வடக்குக்குள் சீனக் கம்பனிகளா?தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் எதிர்ப்பு.

வடக்குக்குள் சீனக் கம்பனிகளா?தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் எதிர்ப்பு.

இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்குப் பகுதியில் சீனக் கம்பனியைக் கொண்டுவருவது பலத்த பாதிப்புக்களை உருவாக்கும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குள் வரக்கூடிய நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு போன்ற தீவுகளில் ஒரு மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்காக இலங்கை அரசு சீனக் கம்பனியுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளதுடன் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவ்வாறான ஒரு விடயம் நடக்குமாக இருந்தால், சீனக் கம்பனிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை இலங்கை அரசுக்குப் பத்து தமிழ் கட்சிகளும் இணைந்து வலியுறுத்துகின்றன.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு இலங்கை அரசால் ஏற்படுத்தக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவைகளைக் கவனத்தில்கொண்டு தமிழர்களின் இருப்பு, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய பத்துக் கட்சிகள் சார்பாக நடவடிக்கைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தமிழ் மக்களுக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குழுவின் இணைப்பாளர்களாக சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் செயற்படவுள்ளார்கள்”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.